தண்டனை கொடுத்த நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற ரவுடி கருக்கா வினோத்! நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு!
Karukka Vinoth TN Governor case judge
கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறி, ரவுடி கருக்கா வினோத் சென்னை கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தின் பின்னணி:
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், ரவுடி கருக்கா வினோத்துக்குப் பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தி.நகரில் உள்ள டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாகப் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், அவரை ஆஜர்படுத்துவதற்காகக் காவல்துறையினர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6-வது கூடுதல் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வு:
நீதிபதி பாண்டியராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத், ஆளுநர் மாளிகை வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாகக் கோஷமிட்டவாறே, தனது காலணியைக் கழற்றி நீதிபதியை நோக்கி வீச முயன்றார். உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர், அவரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து நீதிபதி, இது போன்ற குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றத்துக்கு அழைத்து வராமல், காணொளிக் காட்சி (Video Conferencing) மூலம் ஆஜர்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
English Summary
Karukka Vinoth TN Governor case judge