'அமைச்சர் பதவி வேண்டாம்; பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை; தமிழகத்திலும் எங்களின் கட்சியை தொடங்கியுள்ளோம்'; ஜோஸ் சார்லஸ் மார்டின்..!
Jose Charles Martin states he did not enter politics for the sake of office
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கு இலாகா ஒதுக்குவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். அத்துடன், தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், அமைச்சர்களை முதல்வர் விரைந்து நியமனம் செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
மக்கள் வரிப்பணத்தில் தான் தேர்தலை நடத்தியுள்ளோம். அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கு இலாகா ஒதுக்குவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளதோடு, எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றும், அதற்காக ரூ.100 கோடி வரை பேரம் பேசப்படுகிறது என்றும் சில சர்ச்சைகள் வெளியே வந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், அமைச்சர்கள் நியமனம் செய்வது என்னாலோ அல்லது என்னைச் சார்ந்தவர்களாலோ தாமதம் ஏற்பட்டால் அந்த தாமதத்தை விலகச் செய்ய வேண்டும் என்றும், எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னால் எம்எல்ஏவாக இருந்து என்ன முடியுமோ அதனைக்கொண்டு என்னுடைய காமராஜ் நகர் தொகுதியை மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்று கூறியுள்ளார். அதற்காக அந்தப் பணியை நான் தொடங்க உள்ளதாகவும், அதனால் எனக்கு பதவி வேண்டாம். என்னால் தான் தாமதம் என்றால், என்னை விடுத்து விரைவாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அத்துடன், பக்கத்து மாநிலமான தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. அவர்கள் உடனடியாக அமைச்சர்களை நியமித்து பணிகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். அனுபவம் இல்லாதவர்கள் கூட அவரவர் துறைகளுக்கு சென்று பணிகளை செய்கின்றனர். ஆனால் பல ஆண்டுகள் அரசியலில் நின்று மிகப்பெரிய அனுபவத்துடன் இருந்தும் அமைச்சரவையை அமைக்க தாமதப்படுத்துவது மக்களுக்கு நல்லதல்ல என்று புதுச்சேரி அரசை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

மேலும், வரும் காலம் மழைக் காலம் என்பதால், வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வார வேண்டும் என்றும், குறிப்பாக உப்பனாறு, வெள்ளவாரி வாய்க்கால் மழையால் பாதிப்பு ஏற்படும். அந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் சமீபத்தில் பெய்த மழையில் காமராஜ் நகர் தொகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை எந்த அமைச்சரிடம் சென்று கேட்பது என்று கல்வி எழுப்பியதோடு, இது குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டால் கடந்த முறை மழைக் காலத்தில் வேலை செய்ததற்கே பணம் கொடுக்கவில்லை என்று கூறுவதாகவும், அதனால் எங்களால் செய்ய முடியாது என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் நாங்கள் எங்கள் சொந்த செலவில் அதனை சரி செய்தோம் என்றும், 08 டிராக்டர் அளவில் குப்பைகள் அள்ளப்பட்டன. இதையெல்லாம் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டால் தான் அனைத்தையும் விரைந்து செய்ய முடியும். எனவே விரைவாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூறினேன். சிங்கப்பூரில் இருந்து இன்று ஒரு குழுவினர் புதுச்சேரி, காரைக்காலை பார்வையிட வருகின்றனர். சில மாதிரிகளை அவர்கள் கொடுத்துள்ளனர். அது தொடர்பாக பேச உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், காமராஜ் நகரை மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று சொல்லி வருகின்றேன். அதற்கான பணிகளை தொடங்கிவிட்டேன். கூடிய விரைவில் அது மாறிவிடும் என்றும், தமிழகத்தில் தவெகவை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அத்துடன், இந்த காலச்சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொன்றும் மாறும். இன்று இளைஞர்கள் நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வருகின்றோம். யாரும் பதவிக்கோ, பணம் சம்பாதிக்கவோ வரவில்லை. அதனால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றோம். தமிழகத்திலும் எங்களின் கட்சியை தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Jose Charles Martin states he did not enter politics for the sake of office