அடேங்கப்பா! பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜம்மு காஷ்மீர்...!- அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் மோடி
Jammu and Kashmir with strong police security Prime Minister Modi to lay foundation stone
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீர் புறப்படுகிறார். இதில் பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை ஒட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பில் உள்ளன.மேலும், ஸ்ரீநகர், உதம்பூர், பாராமுல்லா ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். இதன் அம்சமாக, நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். குறிப்பாக இந்த பாலத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படவுள்ளது. இன்று இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
இதைத்தொடர்ந்து கம்பி வழி ரெயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். அதன் பின்னர் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவிலிருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, கத்ராவில் ரூ.46000 கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
English Summary
Jammu and Kashmir with strong police security Prime Minister Modi to lay foundation stone