கோவை திமுகவில் உள்கட்சி மோதல்? செந்தில் பாலாஜியால் வெடித்த மோதல்.. கரூர் ஆட்களால் கோவை திமுகவினர் அப்செட்! குஷியில் அதிமுக!
Internal conflict in Coimbatore DMK Conflict sparked by Senthil Balaji Coimbatore DMK members upset by Karur people AIADMK in Kushi
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் கோவையில் திமுகவினருக்கும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் ஆதரவாளர்களுக்கும் இடையே உள்கட்சி மோதல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 இடங்களை அதிமுக கைப்பற்றியது. கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இந்த பின்னணியில், வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வலுவாக களமிறங்க திமுக முடிவு செய்துள்ளது.
கொங்கு மண்டல பொறுப்பாளராக செயல்பட்டு வரும் செந்தில் பாலாஜி, கடந்த 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் கட்சியை வெற்றி பெறச் செய்தவர் எனக் கருதப்படுகிறார். அதே அணுகுமுறையை இம்முறை சட்டசபை தேர்தலிலும் பின்பற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக கரூரில் இருந்து செந்தில் பாலாஜியின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு மேற்பார்வை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், கோவை திமுகவினர் பூத் வாரியாக வாக்காளர் தரவு சேகரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடு தோறும் சென்று குடும்ப விவரங்கள், வாக்காளர் எண்ணிக்கை, ரேஷன் கார்டு தகவல்கள், நலத்திட்ட பயனாளிகள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு மேலதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
ஆனால், இந்த தரவுகளை கரூர் ஆதரவாளர்கள் ஏற்காமல் நிராகரிப்பதுடன், கடுமையான வார்த்தைகளில் விமர்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “எங்கள் சொந்த மாவட்டத்தில் வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்ற மனநிலை நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த உள்கட்சி மோதல் தொடர்பான தகவல் செந்தில் பாலாஜி கவனத்திற்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் எந்தவித உள்கட்சி பூசலும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதிருப்தியில் உள்ள கோவை நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் காலத்தில் உருவாகியுள்ள இந்த நிலைமை திமுகவுக்கு சவாலாக மாறுமா அல்லது உடனடி பேச்சுவார்த்தையால் சரியாகுமா என்பது வரும் நாட்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
English Summary
Internal conflict in Coimbatore DMK Conflict sparked by Senthil Balaji Coimbatore DMK members upset by Karur people AIADMK in Kushi