தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை...? - திருச்சியில் எடப்பாடி-பியூஷ் கோயல் சந்திப்பு
Intense Consultations on Seat Sharing Edappadi Piyush Goyal Meet Trichy
திருச்சி பஞ்சப்பூரில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது மத்திய மந்திரி பியூஷ் கோயல் அவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த சந்திப்பில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கூட்டணியின் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.பின்னர் நிருபர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற தகவல்கள் முழுமையாக கற்பனையானவை என்றும், அந்த கட்சியை கூட்டணியில் இணைப்பது குறித்து அ.தி.மு.க. தரப்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் தன்னுடைய அறிவுக்கு ஏற்ப பா.ஜ.க. தரப்பிலும் இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.அத்துடன், அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் ஒரு பொற்கால ஆட்சியாக இருந்ததாகவும், அதனால் அந்த ஆட்சியை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக அ.தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாததால், தமிழ்நாடு மற்றும் டெல்லி இடையிலான போட்டியாக அரசியல் நிலையை மாற்ற முயற்சி செய்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வின் புதிய தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
English Summary
Intense Consultations on Seat Sharing Edappadi Piyush Goyal Meet Trichy