47 டன் தங்கத்தை ரகசியமாக இங்கிலாந்துக்கு அனுப்பிய இந்தியா.. 1991 பொருளாதார நெருக்கடியின் அதிர்ச்சி பின்னணி!
India secretly sent 47 tons of gold to England Shocking background of the 1991 economic crisis
1991-ஆம் ஆண்டு இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றும் அவசர முயற்சியாக சுமார் 47,000 கிலோ தங்கத்தை ரகசியமாக இங்கிலாந்துக்கு விமானம் மூலம் அனுப்பிய சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் சர்வதேச கடன் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், 405 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர கடனைப் பெற இந்தியா இந்த துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டது.
தற்போது உலகளாவிய நிதி அழுத்தம் மற்றும் மேற்காசிய போர் காரணமாக சர்வதேச பொருளாதார சூழல் மீண்டும் பதற்றமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, தேவையற்ற தங்க வாங்குதலை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார். இந்தியா தங்கத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்து வருவதால், அதிகளவில் அந்நியச் செலாவணி வெளியேறுவது ரூபாயின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சூழலில், 1991-ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அப்போது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வெறும் 1.2 பில்லியன் டாலராக சரிந்தது. அந்த தொகை நாட்டின் இரண்டு வார இறக்குமதிக்குக் கூட போதாத நிலை ஏற்பட்டது. வெளிநாட்டு கடன் தவணைகளை செலுத்த முடியாத அபாயம் உருவானதால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அவசர நடவடிக்கையாக 47 டன் தங்கத்தை வெளிநாட்டில் அடமானம் வைக்க முடிவு செய்தது.
அந்த காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த எஸ். வெங்கடரமணன் தலைமையில் பல்வேறு அவசர தீர்வுகள் ஆராயப்பட்டன. இறுதியில், இங்கிலாந்தில் உள்ள வங்கிகளில் தங்கத்தை அடமானம் வைத்து சுமார் 405 மில்லியன் டாலர் கடன் பெறப்பட்டது. இதற்காக தங்கக் கட்டிகள் விமானம் மூலம் ரகசியமாக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டன.
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் பொருளாதாரச் சொத்து மட்டுமல்ல; அது பாதுகாப்பு, பெருமை மற்றும் உணர்வுகளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதனால், அரசின் இந்த நடவடிக்கை அப்போது பலரால் “தேசிய அவமானம்” என்றும் விமர்சிக்கப்பட்டது. அதே நேரத்தில், வெளிநாட்டு நாணயத்தை திரட்ட வேண்டிய அவசர சூழ்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 20 டன் தங்கத்தையும் விற்று 215 மில்லியன் டாலர் திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த முடிவுகள் அனைத்தும் சந்திர சேகர் தலைமையிலான இடைக்கால அரசின் காலத்திலேயே தொடங்கப்பட்டன. பின்னர் 1991 ஜூன் 21-ஆம் தேதி பிரதமராக பொறுப்பேற்ற பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு, இந்த நெருக்கடியைத் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை திறந்த சந்தை கொள்கைக்கு மாற்றும் வரலாற்றுச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து முதலில் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சங்கர் அய்யர், தனது Accidental India என்ற புத்தகத்தில், “தங்கத்தை அடமானம் வைக்கும் முடிவு மிகுந்த தைரியமும் அரசியல் ஞானமும் கொண்ட ஒன்று. அதுவே இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான தொடக்கமாக அமைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
1991-இல் இந்தியா எதிர்கொண்ட அந்த பொருளாதார அதிர்ச்சி, பின்னர் நாட்டை உலகின் முக்கிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக மாற்றிய திருப்புமுனையாக இன்று பார்க்கப்படுகிறது.
English Summary
India secretly sent 47 tons of gold to England Shocking background of the 1991 economic crisis