கொங்கு மண்டலத்தில் கேம் ஓவர்! கோட்டை விட்ட எஸ்.பி.வேலுமணி.. கோவையில் ஆட்டத்தை மாற்றிய செந்தில் பாலாஜி!
Game over in Kongu Zone SP Velumani leaves the fort Senthil Balaji changes the game in Coimbatore
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த முறை அதிகளவிலான வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அதிக வாக்கு சதவீதம் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொங்கு மண்டலம் தமிழக அரசியலில் முக்கிய தாக்கம் செலுத்தும் பகுதி என்பதால், இந்த முறை திமுக தனது முழு கவனத்தையும் அந்த பகுதிக்குத் திருப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் எஸ்.பி.வேலுமணி இடையேயான அரசியல் போட்டி அதிக கவனம் பெற்றுள்ளது.
கடந்த சில தேர்தல்களில் கோவை மாவட்டம் அதிமுகவின் பலமான கோட்டையாக இருந்து வந்தது. திமுகவுக்கு அங்கு வெற்றி பெறுவது சவாலாகவே இருந்துள்ளது. இந்த நிலையை மாற்றும் முயற்சியாக, திமுக தலைமையகம் செந்தில் பாலாஜியை கோவை அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபடுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவை தெற்கு தொகுதியில் நேரடியாக களமிறங்கிய செந்தில் பாலாஜி, தனது பிரச்சாரத்தை மற்ற தொகுதிகளிலும் விரிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் திமுகவின் தேர்தல் இயந்திரம் இந்த முறை கோவையில் தீவிரமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக முன்னிலை வகிக்கும் கோவையில், இந்த முறை அதிமுக தரப்பில் எதிர்பார்த்த அளவிலான தீவிரம் காணப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்துவதில் திமுக அதிக கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
கோவை தொழில்துறை மையமாக இருப்பதால், அங்குள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆதரவு தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தொழில் அமைப்புகள் மற்றும் வணிக சங்கங்களை செந்தில் பாலாஜி நேரடியாக சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மாறாக, அதிமுக தரப்பில் முக்கிய தொழில் அமைப்புகளுடன் நேரடி சந்திப்புகள் குறைவாக இருந்ததாகவும், இது ஒரு அரசியல் குறையாக பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக செந்தில் பாலாஜி பல்வேறு திட்டங்களை முன்வைத்ததாகவும், அது நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் தொழில்துறையினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பில் இருக்கும் கட்சியுடன் நெருக்கம் வைத்திருப்பது தொழில்துறைக்கு உதவும் என்ற எண்ணமும் சில வணிக வட்டாரங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் அதிக வாக்குப்பதிவு மற்றும் கோவையில் ஏற்பட்டுள்ள தீவிர அரசியல் போட்டி, தேர்தல் முடிவுகளில் எந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பது மே 4ஆம் தேதி தெளிவாகும். குறிப்பாக கோவை மாவட்ட முடிவுகள், மாநில அரசியல் சமன்பாட்டில் முக்கிய சுட்டிக்காட்டாக அமையலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
English Summary
Game over in Kongu Zone SP Velumani leaves the fort Senthil Balaji changes the game in Coimbatore