அன்புமணி இராமதாஸ் விடுத்த கோரிக்கை - ஆவின் தரப்பில் விளக்கம்!
Dr Anbumani Ramadoss Say about Aavin milk issue Tamilnadu
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு நிற பாலை வாங்கும் நிலைக்கு ஆவின் வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து நேற்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்த செய்திக்குறிப்பில், "பச்சை உறை பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு உறை பால் விலை உயர்த்தப்பட்டது தான். ஆரஞ்சு பால் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்து விட்டது. குறைந்த விலையில் கிடைக்கும் பச்சை உறை பால் தேவை அதிகரித்திருக்கிறது.
பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும். பச்சை உறை பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின் வினியோகித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு; மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு லாபம்.
வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை உறை பால் வினியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்" என்று, அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆவின் மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் தெரிவிக்கையில், "ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் சில்லறை விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, சென்னையில் ஒன்றரை லட்சம் லிட்டர் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை உயர்ந்து இருக்கிறது.
மக்களின் இந்த விருப்பத்துக்கு ஏற்ப, பச்சை நிற பாலை வழங்கி வருகிறோம். தட்டுப்பாடு எங்கும் ஏற்படவில்லை. ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் தட்டுப்பாடு என்றால், ஆவின் நிர்வாகத்தின் உதவி எண் 18004253300-ல் புகார் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say about Aavin milk issue Tamilnadu