திமுகவுக்கு 170 சீட்..கூட்டணி கட்சிகளை விழுங்குதா உதயசூரியன்..ஸ்டாலின் போடும் கணக்கு! அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்!
DMK gets 170 seats Will Udayasuriya swallow the coalition parties Stalin calculations Coalition parties in shock
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அரசியல் நகர்வுகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், அரை நூற்றாண்டுக்கு மேலான அரசியல் பாரம்பரியம் கொண்ட திமுக, தனது நிரந்தர சின்னமான ‘உதயசூரியன்’ மூலம் 2026 தேர்தலில் ஒரு பெரிய அரசியல் திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, வரவிருக்கும் தேர்தலில் குறைந்தது 170 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற வியூகத்தை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகள், இட ஒதுக்கீட்டில் வரும் அழுத்தங்கள் ஆகியவை இருந்தாலும், இந்த முறை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதே திமுக தலைமையின் கணக்கு என கூறப்படுகிறது.
இந்த வியூகத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள திமுகவின் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. 1957-ஆம் ஆண்டு முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்த திமுக, அப்போது அறிஞர் அண்ணா சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட மு.கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றதன் மூலம், உதயசூரியன் திமுக அரசியல் வரலாற்றில் முக்கிய அடையாளமாக மாறியது. பின்னர் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்ததும், அதுவே திமுகவின் நிரந்தர சின்னமாக நிலைபெற்றது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சின்னத்தில் தொடர்ந்து போட்டியிடும் கட்சி திமுக என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசியலில், கூட்டணிக் கட்சிகளுக்கு தனது சின்னத்தை வழங்குவது ஒரு முக்கிய உத்தியாக இருந்து வருகிறது. இதன் மூலம் அந்தச் சின்னத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் சட்டபூர்வமாக திமுக உறுப்பினர்களாகக் கருதப்படுவார்கள். இது ஆட்சி அமைப்பதிலும், கொறடா உத்தரவுகள் மூலம் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் பெரும் பலனளிக்கிறது. அதோடு, மொத்த வாக்கு சதவீதம் உயர்வதற்கும், தேசிய அளவில் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும் இது உதவுகிறது.
தற்போதைய அரசியல் சூழலில், அதிமுக தனது கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து பலமாகத் தோன்றுகிறது. மறுபுறம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 40 தொகுதிகள், விசிக 10 தொகுதிகள் என வலியுறுத்தி வருகின்றன. இதுதவிர தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளும் பேச்சுவார்த்தையில் உள்ளன. இத்தனை கோரிக்கைகளுக்கு இடையே, திமுக இந்த முறை தனது பிரதான சின்னத்தை அதிக அளவில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் சுமார் 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதே பாணியில் இந்த முறையும் 170 தொகுதிகளாவது திமுக நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே இலக்கு. இதற்காக அதிமுக–பாஜக பலவீனமாகக் காணப்படும் தொகுதிகளை திமுக தனியாக அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைப்பதன் மூலம், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை திமுக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முயல்கிறது.
ஆனால், இந்த வியூகம் கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதிமுக போன்ற சில கட்சிகள், கடந்த மக்களவைத் தேர்தலில் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிட்டு அடையாளத்தை நிலைநாட்டியுள்ளன. அதனால், சட்டமன்றத் தேர்தலிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடம் உள்ளது. இருந்தாலும், வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய ‘உதயசூரியன்’ சின்னமே வலுவானது என்பதால், திமுக நிபந்தனையை ஏற்க வேண்டிய நிலை சில கட்சிகளுக்கு ஏற்படலாம்.
மொத்தத்தில், திமுகவின் 170 தொகுதி – உதயசூரியன் வியூகம் என்பது வெறும் எண்ணிக்கைக் கணக்கல்ல; அந்தச் சின்னத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை சோதிக்கும் அரசியல் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வியூகம் திமுகவுக்கு மாஸ் வெற்றியைத் தருமா, அல்லது கூட்டணிக்குள் புதிய நெருக்கடிகளை உருவாக்குமா என்பது தேர்தல் நெருங்கும் போது தான் தெளிவாகும்.
English Summary
DMK gets 170 seats Will Udayasuriya swallow the coalition parties Stalin calculations Coalition parties in shock