"நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!" - வைரல் ஆடியோ விவகாரத்தில் ஆ.ராசா புதிய விளக்கம்!
DMK A Raja Slams EPS
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட ஒரு சர்ச்சை ஆடியோ தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த ஆடியோவை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) விமர்சனம் செய்து வரும் நிலையில், அதற்கு ஆ.ராசா இன்றுமிகக் கடுமையான பதிலடியைத் தந்துள்ளார். அந்த ஆடியோ முற்றிலும் பொய்யானது என்றும், அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஆ.ராசா குறிப்பிடுகையில், "எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் அந்த ஆடியோ கிளிப் பல இடங்களில் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு, நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலியாகப் புனைந்து உருவாக்கப்பட்டது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உண்மை நிலவரம் இப்படியிருக்க, எவ்வித ஆதாரமும் இல்லாமல் அரசியல் ஆதாயத்திற்காகப் பதவி வேட்கையில் எடப்பாடி பழனிசாமி இதைப் பயன்படுத்துவது அரசியல் அநாகரிகத்தின் உச்சம்" என்று சாடியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரைப் பற்றித் தேர்தல் நேரத்தில் அவதூறாகப் பேசுவதற்காக இத்தகைய மலிவான உத்திகளை எதிர்க்கட்சிகள் கையாளுவதாக அவர் குற்றம் சாட்டினார். "யாசித்து, பிச்சையாகப் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு அரசியலுக்கும், பொதுவாழ்க்கைக்கும் எந்தத் தகுதியும் இல்லை" என்று குறிப்பிட்ட அவர், மகாகவி பாரதியாரின் 'பாஞ்சாலி சபத' வரிகளான "ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!" என்பதை மேற்கோள் காட்டி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.