அமித் ஷாவிடம் அதிருப்தி தெரிவித்தாரா எடப்பாடி? – அதிமுக பிளவு தீவிரம்! அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகும் இபிஎஸ்!
Did Edappadi express dissatisfaction with Amit Shah AIADMK split intensifies EPS prepares for next step
அதிமுகவில் உருவாகியுள்ள உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசியில் பேசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழக்கும் நிலை ஏற்பட்ட நிலையில், கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளது. பல முக்கிய தொகுதிகளில் தோல்வி ஏற்பட்டதோடு, முன்னணி தலைவர்களும் பின்னடைவை சந்தித்தனர்.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம், சட்டமன்றத்தில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு, எடப்பாடியின் சில முடிவுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அந்த அணியினர் தனியாக ஆலோசனை நடத்தியதுடன், பின்னர் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவுடன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, “தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் சில முன்னாள் அமைச்சர்கள் அவசரமாக ஆதரவு அளித்துவிட்டனர்” என்று எடப்பாடி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரவில்லை. அப்படி இருக்கும்போது நாமாக சென்று ஆதரவு அளிப்பது ஏன்? சிலர் அமைச்சர் பதவி எதிர்பார்ப்பில் செயல்பட்டுள்ளனர்” என்றும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, “தமிழக அரசியலில் திமுக பின்பற்றிய அரசியல் அணுகுமுறையை தற்போது தவெகவும் பின்பற்றுகிறது. நிலைமையை பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அதிமுக தற்போது வெளிப்படையாக இரண்டு அணிகளாக செயல்பட தொடங்கியுள்ளது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி அணியும், மறுபுறம் எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் அணியும் செயல்பட்டு வருகின்றன.
மேலும், சட்டமன்றக் குழு தலைவர் யார் என்ற விவகாரமும் தற்போது சபாநாயகர் முடிவுக்காக காத்திருக்கிறது. இரு அணிகளும் தங்களுக்கே பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கடிதம் வழங்கியுள்ளதால், சபாநாயகர் எடுக்கும் அடுத்தகட்ட முடிவு அதிமுக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Did Edappadi express dissatisfaction with Amit Shah AIADMK split intensifies EPS prepares for next step