டெல்லி புத்தக வெளியீட்டு விழாவைத் தவிர்த்தாரா முதல்வர் விஜய்...? - வைகோ அளித்த பரபரப்பு விளக்கம்...!
Did Chief Minister Vijay skip Delhi book launch event Vaiko sensational explanation
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டெல்லியில் நடைபெறவுள்ள தனது நூல் வெளியீட்டு விழா மற்றும் அதில் முதல்வர் விஜயின் பங்கேற்பு குறித்து முக்கிய விளக்கத்தை அளித்தார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 30 ஆண்டுகளாக தாம் ஆற்றிய ஆங்கில உரைகள் தொகுக்கப்பட்டு நான்கு தொகுதிகளாக நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நூல் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்டு 4-ந் தேதி டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறவுள்ளது என்றும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நூல்களை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள முதல்வர் விஜய் தனது ஒப்புதலை வழங்கியிருந்ததாக குறிப்பிட்ட வைகோ, பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக தெரிவித்தார்.
டெல்லியில் முதல்வர் விஜய் பங்கேற்றால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அதிகளவிலான மக்கள் திரளும் வாய்ப்பு இருப்பதோடு, பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளிலும் கூடுதல் சிரமங்கள் உருவாகக்கூடும் என்பதால், அந்த விழாவில் கலந்துகொள்வதை தவிர்ப்பதே சிறந்தது என்று தாமே முதல்வரிடம் தெரிவித்ததாக வைகோ விளக்கமளித்தார்.
அதேநேரத்தில், தனது ஆங்கில உரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை நகரில் தனியாக வெளியிடப்படும் விழாவில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு முதல்வர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லி நிகழ்வின் சுமையை குறைத்து, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தமிழ் நூல் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் வைகோ தெரிவித்தார்.
English Summary
Did Chief Minister Vijay skip Delhi book launch event Vaiko sensational explanation