விவசாயிகள் சங்கத் தலைவர்களை சிறையிலடைப்பதா? அடக்குமுறையைக் கை விடுக! கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
CPM Condemns for farmers are in prison
பவர்கிரிட் நிறுவனத்தின் சார்பில் தாராபுரம் அருகே புகலூர் முதல் கேரள மாநிலம் திருச்சூர் வரை அமைக்கப்பட உள்ள 400 கிலோவாட் உயர்மின் கோபுரம் திட்டத்திற்காக, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சின்னாரிபாளையம் கிராமத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி, முன்நுழைவு அனுமதியின்றி பவர்கிரிட், வருவாய்துறை, காவல்துறை இணைந்து வெள்ளிக்கிழமை உழவர்களின் நிலங்களுக்குள் அராஜகமாக நுழைந்தனர். அத்துமீறி நிலத்தை அளக்க முயன்றபோது அதனை எதிர்த்த விவசாயிகள் ஆண்கள் - பெண்கள் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர்.
அதேசமயம், உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு குண்டடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, முன்னணித் தலைவர்களான 1) வழக்கறிஞர் ஈசன், 2) சண்முக சுந்தரம், 3) முத்துவிசுவநாதன், 4) பார்த்தசாரதி, 5) தங்கமுத்து ஆகிய ஐந்து பேர் மீதும் காவல்துறை பொய் வழக்குப் போட்டு கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளது. நில உரிமைக்காகப் போராடும் விவசாயிகள் மீது தமிழக அரசு கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகளை தமிழக அரசு அழைத்துப்பேசி உரிய இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் காலாவதியாகிப் போன 1885 ஆம் ஆண்டு தந்திச் சட்டத்தைப் பயன்படுத்தி உயர்மின் கோபுரங்கள் அமைப்பதையும், அதற்காக அத்துமீறி நில அளவை செய்வதையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக நிறுத்த வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டம் இயற்ற வேண்டும். ஈசன் உட்பட ஐந்து தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறுவதோடு, கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" என அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
English Summary
CPM Condemns for farmers are in prison