சின்ன புரட்சித் தமிழர் அரசியல் எண்ட்ரி! அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் கட்சிக்குள் புதிய குழப்பம்!
Chinna Puratchi Tamizhar enters politics Is Edappadi son joining the AIADMK Mithun sparks fresh confusion within the party
சென்னை: சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தொடர்ந்து உள்கட்சி நெருக்கடிகளை சந்தித்து வரும் அதிமுகவில், தற்போது வாரிசு அரசியல் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை நேரடி அரசியலுக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெறுவதாக வெளியான தகவல்கள், கட்சிக்குள் புதிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கடுமையான பின்னடைவை சந்தித்ததுடன், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இதையடுத்து கட்சிக்குள் பல்வேறு அதிருப்தி குரல்கள் எழுந்தன. முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கட்சித் தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மிதுனுக்கு இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கருத்தை சில நிர்வாகிகள் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதுவே தற்போது கட்சிக்குள் வாரிசு அரசியல் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது சமூக வலைதள பதிவில், "உழைக்கும் உண்மை தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாக பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல" என்றும், "வரலாறு எத்தனை பேரை நீக்கினோம் என்பதை நினைவில் வைக்காது; எத்தனை பேரை ஒன்றிணைத்தோம் என்பதையே நினைவில் வைக்கும்" என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு, அதிமுக தலைமையை மறைமுகமாக விமர்சிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அதேபோல், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் ராஜ் சத்யனும், தேர்தல் தோல்விக்குப் பிறகு தேவையற்ற விவாதங்களை உருவாக்குவது சரியல்ல என்று பதிவிட்டுள்ளார். அவரது கருத்து, மிதுனை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு எதிரான நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
திமுக மீது குடும்ப அரசியல் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வந்த அதிமுகவிலேயே தற்போது வாரிசு அரசியல் விவாதம் எழுந்திருப்பது, பல தொண்டர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மிதுனை அரசியலுக்கு கொண்டு வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி அல்லது அதிமுக தலைமையிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
தேர்தல் தோல்வி, உள்கட்சி அதிருப்தி மற்றும் தலைமை மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் சூழலில், மிதுன் விவகாரம் அதிமுக அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
English Summary
Chinna Puratchi Tamizhar enters politics Is Edappadi son joining the AIADMK Mithun sparks fresh confusion within the party