'ஜனாதிபதி வழக்கின் தீர்ப்புக்கு பின், ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் மனுக்கள் விசாரிக்கப்படும்'; தலைமை நீதிபதி..!
Chief Justice says Tamil Nadu governments petitions against Governor will be heard after Presidents case verdict
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வது குறித்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, கலைஞர் பல்கலைகழகம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக விளையாட்டு பல்கலைகழகம் மசோதாவுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த இரண்டு மனுக்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் எனவும், அதை மீறி மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அவர் அனுப்பி வைத்திருக்கிறார்' என, வாதிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி கூறுகையில், ஏற்கனவே ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஜனாதிபதி, 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வர வேண்டியுள்ளது.
அத்துடன், அந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 21-க்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும், எனவே, தமிழக அரசின் இந்த புதிய மனுக்களை அந்த தீர்ப்பு வெளியான பின் விசாரிக்கலாம் எனக்கூறி, விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
English Summary
Chief Justice says Tamil Nadu governments petitions against Governor will be heard after Presidents case verdict