செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கலாமா? ED பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Chennai Court directs ED to respond to SenthilBalaji bail plea
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 15ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவின் படி புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், 70 நாட்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் இருப்பதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது ஆஜரான அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி அமலாக்கத்துறை வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது பதில் மனு தாக்கல் மற்றும் இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றைய தினமே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்குவது குறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என தெரிய வருகிறது.
English Summary
Chennai Court directs ED to respond to SenthilBalaji bail plea