கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; பொங்கல் பண்டிகைக்கு பிறகு மீண்டும் விஜய்யிடம் சிபிஐ விசாரணை..!
CBI to question Vijay again after the Pongal festival
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் இன்று சுமார் 03 மணிநேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து நாளை விசாரணை நடத்த முடிவு செய்த நிலையில், விஜய்யின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, விசாரணையை சிபிஐ ஒத்திவைத்துள்ளாத தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி, புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் 03 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்த நிலையில், விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது.

அதன்படி, இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணியளவில், அவர் ஆஜரானார். இதையடுத்து விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 07 மணி நேரமாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதை நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா..? கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்..? எப்போது சம்பவ இடத்தில் இருந்து வெளியேறினீர்கள்..? என விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய்யிடம் இன்று நடைபெற்ற விசாரணை வீடியோ பதிவு செய்யப்படவில்லை எனவும் ஒப்புதல் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்று, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. நாளையும் விசாரணை என கூறப்பட்ட நிலையில் தற்போது ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது. விஜய் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளனர்.
English Summary
CBI to question Vijay again after the Pongal festival