மணிப்பூரில் நடந்த கொடூரம்! மனித குலத்திற்கே எதிரானது! அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் மெய்டி மற்றும் குகி சமூக மக்களிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது. தற்போது வரை இந்த கலவரத்தில் பலர் உயிரிழந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்ததோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மே 4 ஆம் தேதி குகி இன பெண்கள் 3 பேர் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு ஆடைகள் இன்றி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளியான நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "மணிப்பூரில் இளம்பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஆடை கலைப்பு - பாலியல் வன்கொடுமை மனிதகுலத்திற்கு எதிரானது : குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! 

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். நாகரிகத்தின் கால் தடம் கூட பதியாத பகுதிகளில் கூட இத்தகைய கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்காது. மணிப்பூரில் நடந்த இந்த கொடிய குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை; மனிதர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்பவை" என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் "மே மாதம் 4-ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு 35 கி.மீ தொலைவில் நடந்த இந்த குற்றங்கள் இப்போது காணொலியாக வெளியாகியிருப்பதன் மூலம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும், கொல்லப்பட்ட இளைஞர்களும் எந்த குற்றமும் செய்யவில்லை. கலவரத்தில் தொடர்புடைய இன்னொரு பிரிவினரால் ஆயுதங்களுடன் சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்திலிருந்து தப்பிச் சென்றது தான் அவர்கள் செய்த குற்றம் ஆகும். இப்படி ஒரு குற்றம் நடந்ததே இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் உலகிற்கு தெரிகிறது என்றால், அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வளவு மோசமடைந்திருக்கிறது என்பதை உணரலாம்.

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடித்த கலவரம் உடனடியாக கட்டுப்படுத்தப்படாதது தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைவதற்கு காரணம் ஆகும். இதற்கு காரணமாக குற்றவாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக மணிப்பூரில் நடைபெறும் கலவரங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் அச்சம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்க உளவியல் கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anbumani Ramadoss Condemns Manipur Riots Video


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->