ஈரான் போரின் எதிரொலி; இந்தியாவில் தின்பண்டங்கள், சோப்பு, சிப்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயரும் அபாயம்.!
Risk of Price Hikes in India for Various Goods Including Snacks Soaps and Chips
ஈரான் போர் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை மீண்டும் உயர கூடும் அபாயம் நிலவுகின்ற நிலையில், விரைவில் பாமாயில் பற்றாக்குறை ஏற்பட கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உலகிலேயே ஆண்டுதோறும் சுமார் 9.5 மில்லியன் டன் அளவில் அதிக அளவு பாமயிலை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால், உள்நாட்டு பாமாயில் உற்பத்தி 04 லட்சம் டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. இந்த சூழலில் நம் நாட்டின் பெரும்பாலான பாமாயில் தேவையை இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
அதேநேரம், இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயில் சுமார் 40 சதவீதம் பாமாயில் ஆகும். இதன் விலை குறைவாகவும், நீண்ட நாள் கெடாமல் இருப்பதாலும் வீடுகளில் மட்டுமின்றி சிப்ஸ், சமோசா, பிஸ்கட், கேக், பேக்கரி பொருட்கள், இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவை தவிர சோப்பு, கிரீம், லோஷன் உள்ளிட்ட அழகு தயாரிப்பு பொருட்களிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகள் பாமாயில் ஏற்றுமதி தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலித்து வருகின்றன. இதற்கு காரணம் பாமயிலை பயோ டீசலாக மாற்றி, டீசலுடன் கலந்து உள்நாட்டில் பயன்படுத்தும் திட்டம் குறித்து அந்நாடுகளில் பரிசீலனையில் உள்ளது. அதன்படி, இந்தோனேசியா டீசலில் 40 சதவீதம் வரை பாமயிலை கலக்க முயற்சிக்கிறது.
அதன்படி, மலேசியாவும் பி10-லிருந்து பி15, பி20 போன்ற திட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஹோர்மோஸ் நீரிணை பகுதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் கப்பல் போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற காரணங்கள் பாமாயில் ஏற்றுமதி விவகாரத்தை இன்னும் சிக்கலாக்கியுள்ளன.
இந்த காரணங்களால் இரு நாடுகளிடமிருந்தும் இந்தியாவிற்கு கிடைக்கும் பாமாயில் அளவு குறைந்து சமையல் எண்ணெய், தின்பண்டங்கள், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Risk of Price Hikes in India for Various Goods Including Snacks Soaps and Chips