பெண் பயணியிடம் முன்பதிவு பயணச்சீட்டு பெற்றுத் தருவதாக கூறி பாலியல் பலாத்காரம்; ரயில்வே ஊழியர் அதிரடி கைது: ஓய்வூதிய பலனின்றி உடனடி பணிநீக்கம்..!
Railway employee arrested for raping female passenger and dismissed without pension benefits
ஒடிசா மாநிலம் நுவாபடா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 02 உறவினர்களுடன் வேலை தேடி பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த புதன்கிழமை திட்லாகர் பகுதியில் இருந்து ரயிலில் புறப்பட்ட மூவரும், வழி தவறி வேறொரு ரயிலில் ஏறி ஹட்டியா சென்றடைந்துள்ளனர்.
அதன் பின்னர் தாங்கள் தவறான ரயிலில் வந்ததை உணர்ந்து, அங்கிருந்து மாற்று ரயில் மூலமாக நேற்று காலை 09 மணியளவில் ரூர்கேலா ரயில் நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர். அங்கிருந்து பெங்களூரு செல்வதற்கான பயணச்சீட்டு உறுதியாகாததால், அவரது 02 உறவினர்களும் டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டருக்கு சென்றுள்ளனர்.
அப்போது குறித்த பெண் மட்டும் நடைமேடையில் தனியாக காத்திருந்துள்ளார். அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர், அந்த பெண்ணிடம் முன்பதிவு பயணச்சீட்டு பெற்றுத் தருவதாக நயவஞ்சகமாக பேசி, நடைமேடையில் உள்ள ஓய்வறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் உள்பக்கமாக பூட்டி குறித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன், இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என ரூ.2,000 கொடுத்தும் மிரட்டியுள்ளார்.
அவரிடமிருந்து தப்பித்து ஓடிச்சென்ற அப்பெண், தனது உறவினர்களிடம் கூறி ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஊழியரை அதிரடியாக கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து சக்ரதார்பூர் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் ஆதித்ய சவுத்ரி, கைது செய்யப்பட்ட ரயில்வே ஊழியர் எவ்வித ஓய்வூதிய பலன்களும் இன்றி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Railway employee arrested for raping female passenger and dismissed without pension benefits