புதுச்சேரி | கல்லூரி மாணவர் தற்கொலை: விசாரணையில் வெளியாகிய காதல் கதை!
Puducherry College student suicide
புதுச்சேரி, கொசபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 55) இவர் பைனான்சியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மிதுன்குமார் (வயது 17) இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரங்கசாமி, சொந்த ஊரான திருப்பூரில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாயை பார்ப்பதற்காக அவரது மனைவியுடன் சென்று விட்டார்.
அப்போது மிதுன்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. இதனிடையே அவரது தாய் மிதுன்குமாரை பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் மிதுன்குமார் போனை எடுத்து பேசாததால் சந்தேகம் அடைந்த அடைந்து பக்கத்து வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது வீட்டிற்குள் மிதுன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக இருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மிதுன்குமார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மிதுன்குமார், கல்லூரியில் படித்து வரும் சக மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக அந்த மாணவி மிதுன்குமாரிடம் பேசாமல் இருந்ததாகவும் தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த மிதுன்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Puducherry College student suicide