'இந்த நாட்டு இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்துக்கான போராட்டத்தைக் கையில் எடுத்துவிட்டார்கள்'; சிஜேபி கூட்டத்தில் கொந்தளித்த பிரகாஷ்ராஜ்..!
Prakash Raj stated at a CJP meeting that young people have taken up the struggle for their future
நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி பெங்களூருவில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மழையினில் நனைந்தவாறே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்; ''தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். நீங்கள் அரசியல் செய்யுங்கள், நாங்கள் எங்கள் வேலைகளைப் பார்த்துக் கொள்கிறோம் என்ற சமன்பாட்டை மாற்றியது யார்?

இந்த நாட்டு இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்துக்கான போராட்டத்தைக் கையில் எடுத்துவிட்டார்கள். ஓய்வு பெறும் வயதைத் தாண்டியும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அங்கிள்கள், ஆன்டிகள் அனைவரும் இங்கிருந்து கிளம்புங்கள். இளைஞர்கள் தங்களின் கனவுகளுக்காகப் போராடுகிறார்கள்'' என்று மத்திய அரசை விமர்சித்து பேசினார்.
அடுத்ததாக காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, பேசுகையில்; ''இந்தச் சீர்குலைந்த கல்வி அமைப்பை கேள்வி கேட்கும் போதெல்லாம் எங்களை அதிகார வர்க்கத்தினர் கரப்பான்பூச்சிகள் என்று அழைக்கிறார்கள். வருங்காலத்தில் மருத்துவர்களாகி பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் இந்த வினாத்தாள் கசிவால் பாழாக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணமான கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. ஜூன் 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவுள்ள மிகப்பெரிய முற்றுகைப் போராட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களும் திரள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Prakash Raj stated at a CJP meeting that young people have taken up the struggle for their future