வாக்கு திருட்டு; 'காங்கிரஸ் போராட்டத்துக்கும் இண்டி கூட்டணிக்கும் தொடர்பில்லை': அது அவர்களின் சொந்த பிரச்சினை; உமர் அப்துல்லா..!
Omar Abdullah says the Congress protest regarding vote rigging has no connection to the INDIA alliance
'ஓட்டுத் திருட்டு' குறித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்துக்கும், 'இண்டி' கூட்டணிக்கும் எந்தத் தொடர்புமில்லை, என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
டில்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடந்த மாநாட்டில் பேசிய உமர் அப்துல்லா கூறியதாவது: 'இண்டி' கூட்டணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை ஆதரவின் மூலமாகவே கூட்டணி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது' எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன், ஓட்டுத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கும் இண்டி கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பேசியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அஜென்டா உள்ளது. எஸ்ஐஆர் மற்றும் ஓட்டுத் திருட்டு ஆகியவற்றை காங்கிரஸ் முக்கியமான விஷயமாக தேர்வு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு சொல்ல நாங்கள் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்களுக்கான பிரச்சினையை அவர்கள் செய்வார்கள் என்றும், எங்களுக்கான பிரச்சினையை நாங்கள் தேர்வு செய்வோம் என்று உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் ஓட்டுத் திருட்டு குறித்து நீண்ட காலமாக பாஜவையும், தேர்தல் கமிஷனையும் குற்றம்சாட்டி வந்தார். டில்லியில் நேற்று காங்கிரஸ் சார்பில் பேரணி மற்றும் போராட்டம் நடந்தது. டில்லியில் நடந்த போராட்டத்தில் ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், இது அவர்களின் சொந்த பிரச்சினை என உமர் அப்துல்லா பேட்டி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Omar Abdullah says the Congress protest regarding vote rigging has no connection to the INDIA alliance