புகை இல்லை, சத்தம் இல்லை... உலக நாடுகளை மிரட்ட வரும் இந்தியாவின் 'சுதேசி' ஹைட்ரஜன் ரயில்! - ரயில்வே வாரியம் அப்ரூவல்
No smoke no noise India indigenous hydrogen train coming scare world Railway Board Approval
இந்திய ரெயில்வே துறையில் புதிய வரலாறு படைக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை போக்குவரத்து நோக்கில், முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரெயில் விரைவில் சேவைக்கு வரவுள்ளது.இந்த அதிநவீன பசுமை ரெயிலை இயக்குவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளதால், இந்திய ரெயில்வே வளர்ச்சியில் இது முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தை ரெயில்வே துறையில் வெற்றிகரமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் பெருமையுடன் இடம்பிடித்துள்ளது. ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளின் வரிசையில் இந்தியா இணைவது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
பொதுவாக டீசல் என்ஜின்கள் கரும்புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியேற்றும். ஆனால் இந்த ஹைட்ரஜன் ரெயில் முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இணையும் வேதியியல் செயல்முறை மூலம் மின்சாரம் உருவாக்கப்பட்டு, அதனாலேயே இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் புகை அல்லது நச்சு வாயுக்கள் எதுவும் வெளியேறாது.இந்த ரெயிலில் இருந்து வெளிப்படுவது தூய்மையான நீராவி மட்டுமே என்பதால், இது பசுமை தொழில்நுட்பத்தின் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.இந்த பசுமை ரெயில் முதற்கட்டமாக வடமேற்கு ரெயில்வே மண்டலத்தின் கீழ் இயக்கப்பட உள்ளது.
ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் முதல் சோனிபட் வரையிலான வழித்தடத்தில் இந்த சேவை அறிமுகமாகிறது.மணிக்கு அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரெயிலில் மொத்தம் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மேலும், சக்திவாய்ந்த 1200 கிலோவாட் திறன் கொண்ட என்ஜின் இதில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த ரெயிலின் செயல்பாட்டிற்காக ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் பிரத்யேக ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையத்திற்கு மத்திய அரசின் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பான PESO அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் உயர்தர தரநிலைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ரெயிலை பராமரிப்பதற்காக டெல்லி சாகுர்பஸ்தி பகுதியில் தனித்துவமான பராமரிப்பு மையமும் உருவாக்கப்பட உள்ளது. அங்கு வழக்கமான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.இந்திய அரசின் ‘தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்’ முக்கிய அங்கமாக இந்த ஹைட்ரஜன் ரெயில் அறிமுகமாகிறது.
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைத்து, கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தி, 2070-ஆம் ஆண்டுக்குள் மாசில்லா இந்தியாவை உருவாக்குவதே இந்த திட்டத்தின் மிகப்பெரிய இலக்காகும்.போக்குவரத்து துறையில் பசுமை புரட்சியை உருவாக்கும் இந்த ஹைட்ரஜன் ரெயில், இந்தியாவின் தொழில்நுட்ப திறனையும் சுற்றுச்சூழல் பொறுப்பையும் உலக அரங்கில் மீண்டும் நிரூபிக்க உள்ளது.
English Summary
No smoke no noise India indigenous hydrogen train coming scare world Railway Board Approval