அசாம் எரிந்த இரவு: இன மோதலில் 2 இளைஞர்கள் பலி...! - ராணுவம் களமிறக்கம்
night Assam burned Two youths killed ethnic clashes Army deployed
இன மோதல்களால் அடிக்கடி பதற்றம் சூழும் அசாம் மாநிலம், மீண்டும் வன்முறையின் அலைகளில் சிக்கியுள்ளது. இரு சமூகங்களுக்கிடையே வெடித்த கடும் மோதலில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக ராணுவம் களமிறங்கி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. பதற்றம் நீடிப்பதால், மாவட்டம் முழுவதும் கனத்த போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு, கோக்ரஜார் நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிகான் பகுதியில், போடோ சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த இரு இளைஞர்களுடன் வாகனம் மோதியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து, சில நிமிடங்களில் கைகலப்பாக வெடித்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனம் மோதிய இளைஞர்களின் சமூகமான ஆதிவாசியினர் ஒன்றுகூடி, அந்த மூன்று இளைஞர்களை தாக்கினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரத்தின் உச்சத்தில், ஸ்கார்பியோ வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். மோதலில் ஈடுபட்ட மற்ற நான்கு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த ஒருவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.இந்த இரட்டை உயிரிழப்புகள், இரு சமூகங்களையும் போராட்டப் பாதைக்கு தள்ளின. கோபம் கொண்ட கூட்டங்கள் வீடுகள், ஒரு அலுவலகக் கட்டிடம், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்த ஆதிவாசி கிளர்ச்சிக் குழுவின் முகாம் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர்.
மேலும் கரிகான் காவல் புறக்காவல் நிலையமும் தாக்கப்பட்டதால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.வன்முறை பரவாமல் தடுக்க, போலீஸ், ராணுவம், விரைவு அதிரடிப்படை, மத்திய அரசுக் காவல் படை மற்றும் அசாம் மாநில காவல்துறையினர் இணைந்து களமிறக்கப்பட்டனர். இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இராணுவம் இரண்டாவது நாளாக கொடி அணிவகுப்பை நடத்தி, மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நான்கு முதல் ஐந்து நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.பி. அகிலேஷ் குமார் சிங், “நிவாரண முகாம்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம். மக்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; வதந்திகளை நம்பக் கூடாது,” என தெரிவித்தார்.
மேலும், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், கோக்ரஜார் மாவட்டத்தில் BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் தொடர்ந்தும் அமலில் உள்ளன.
அதேபோல், கோக்ரஜார் மற்றும் அதனை ஒட்டிய சிரங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.அசாம் முழுவதும் தற்போது பதற்றம் நிறைந்த அமைதியே நிலவுகிறது.
English Summary
night Assam burned Two youths killed ethnic clashes Army deployed