சடலங்களுடன் போராட்டம் நடத்தினாலோ அல்லது தகனம் செய்வதில் தாமதம் செய்தாலோ சிறைத்தண்டனை; புதிய சட்டம் அமல்..!
New law to impose prison sentence for protesting with corpses or delaying cremation
ராஜஸ்தானில் பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநில அரசு இறந்த உடல்களுக்கு மரியாதை செலுத்தும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதாவது, ராஜஸ்தானில் சடலங்களுடன் போராட்டம் நடத்தினாலோ அல்லது தகனம் செய்வதில் தாமதம் செய்தாலோ 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனும் சட்டத்தை அதிரடியாக அமல்படுத்தியுள்ளது.
குறித்த சட்டமானது முதன்முதலில் அம்மாநில சட்டமன்றத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியால் 2023-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், பாஜக அரசாங்கம் அதில் எந்த திருத்தங்களும் செய்யாமல் அமல்படுத்தியுள்ளது. அதாவது, இறந்த உடலைப் பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவது, சடலத்தை அரசியலாக்குவது மற்றும் இறுதிச் சடங்கை 24 மணி நேரத்திற்கும் மேலாக தாமதப்படுத்துவது போன்ற விஷயங்களை கிரிமினல் குற்றங்களாகக் கருதுகிறது.

குறித்த புதிய விதிகளின்படி, இறந்தவரின் இறுதிச் சடங்குகள், இறந்த 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் வெளி மாநிலங்களில் இருந்தால் அல்லது உடலின் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டியிருந்தால் மட்டுமே இறுதிச் சடங்கை தாமதப்படுத்த சிறப்பு அனுமதிகள் வழங்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இறந்தவரின் உடலைப் பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவது, சாலைகளை மறிப்பது மற்றும் அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது உள்ளிட்டவற்றுக்கு இச்சட்டம் தடை விதிக்கிறது என்றும், மீறிச் செய்வோர் மீது ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் அல்லது சமூக அழுத்தம் காரணமாக இறந்தவரின் உடலை குடும்பத்தினர் உரிமை கோரவில்லை என்றால், அதற்கும் தண்டனை விதிக்கப்படும் என்றும் புதிய சட்டம் பரிந்துரைத்துள்ளது. இறந்த உடலுடன் போராட்டம் நடத்தும் குடும்ப உறுப்பினர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது பாஜக விமர்சித்த நிலையில், தற்போது அதே சட்டத்தை , அதில் சிறிதும் மாற்றமின்றி அப்படியே அமல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
New law to impose prison sentence for protesting with corpses or delaying cremation