மத்திய கிழக்கு பதற்றம்....! ஒரு வாரத்தில் 52 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்...!
Middle East tension 52 thousand Indians returned home week
மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற வளைகுடா நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொடர் மோதல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு நிலைமை பதற்றமாக மாறியுள்ளது.கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய இந்த மோதல் ஒரு வாரத்தைக் கடந்தும் தொடர்கிறது.

பாதுகாப்பு காரணங்களால் பல நாடுகள் தங்களது வான்வழிகளை தற்காலிகமாக மூடியதால், அந்தப் பகுதிகளில் இருந்த பலர் நாடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக வான்வழிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருவதால், இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மீண்டும் தங்களது சேவைகளை தொடங்கியுள்ளன.
இதன் மூலம் அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள் தாயகத்திற்குத் திரும்பும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன.மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை நடந்த மீட்பு நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு விமானங்களின் உதவியுடன் சுமார் 52 ஆயிரம் இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களிலும் மேலும் பல இந்தியர்களை தாயகத்திற்குக் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக வழக்கமான விமான சேவைகளுடன் சேர்த்து சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
மேலும், மேற்கு ஆசிய நாடுகளில் வசித்து வரும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி விநியோகம் தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்ய இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் விளக்கியுள்ளது.
English Summary
Middle East tension 52 thousand Indians returned home week