"பேய் வதந்தியால் காலியான விடுதி!": மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்திய 'கூட்டு மனப்பிராந்தி' சம்பவம்!
Mass Hysteria Triggers Panic at Maharashtra Tribal Hostel Over 600 Students Flee Overnight
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம், மேல்காட் மலைப்பகுதியில் உள்ள சிகல்தாராவில் 'டோமா அரசு பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளி' இயங்கி வருகிறது. 800-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் பயிலும் இவ்விடுதியில், கடந்த மாதம் நடுநிசியில் கொலுசு சத்தம் மற்றும் விசித்திரமான முனங்கல் ஒலிகள் கேட்பதாகச் சில மாணவிகள் பயத்துடன் தெரிவித்தனர்.
தொடர்ந்து சில மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தும், ஆக்ரோஷமாக அழுது சிரித்தும் விசித்திரமான அறிகுறிகளை வெளிப்படுத்தினர். இதனால் விடுதிக்குள் அமானுஷ்ய சக்தி புகுந்துவிட்டதாகவும், எஸ்டேட் பகுதியில் மரத்தை வெட்டியதால் பேய் கோபமடைந்துவிட்டதாகவும் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இடையே அச்சமும் திகில் வதந்திகளும் காட்டுத்தீயாகப் பரவின.
ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
அச்சம் உச்சக்கட்டத்தை எட்டியதால், தங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருதி பெற்றோர் பதறியடித்து ஓடிவந்தனர். ஒரே இரவில் 345 மாணவிகள், 263 மாணவர்கள் என மொத்தம் 608 பேர் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு விடுதியை விட்டு அவசரமாக வெளியேறினர். 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நாளில் வெளியேறியதால் விடுதியே வெறிச்சோடி, மாவட்ட அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவக் குழுவின் அறிவியல் விளக்கம்
இப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையின் மனநல மருத்துவ நிபுணர்கள் குழுவினர் பள்ளிக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அங்கு அமானுஷ்ய சக்தியோ பேயோ எதுவும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக மறுத்தனர்.
மாஸ் ஹிஸ்டீரியா (Mass Hysteria): இது பேய் பிடிப்பு அல்ல; கடுமையான மனஅழுத்தம் மற்றும் பயத்தின் காரணமாக ஏற்படும் 'கூட்டு மனப்பிராந்தி' என்ற தற்காலிக மனநல பாதிப்பாகும்.
பரவும் கற்பனைப் பயம்: ஒருவர் பயப்படுவதைக் கண்டு மற்றவர்களும் அதேபோலக் கற்பனை செய்துகொண்டு பயப்படும் மனநிலையே இதன் அடிப்படை காரணம் என மருத்துவர்கள் அறிவியல் பூர்வமாக விளக்கினர்.
மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் தெளிவான விளக்கத்தைத் தொடர்ந்து, பயம் தெளிந்த மாணவர்கள் தற்போது மீண்டும் விடுதிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
English Summary
Mass Hysteria Triggers Panic at Maharashtra Tribal Hostel Over 600 Students Flee Overnight