சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் - கேரள போலீசார் அட்டூழியம்.!
kerala police attack tamilnadu devotees in sabarimalai
சபரிமலைக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. அதனால், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சென்று வருகின்றனர். அதனால் தமிழக பக்தர்களுக்கு அங்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு கோயில் நடை திறக்கப்பட்டது முதல் தமிழக பக்தர்கள் புறக்கணிக்கப்பட்டும், அலட்சியப்படுத்தப்பட்டும் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது, இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருவதால் கேரள பக்தர்களை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கும் அம்மாநில போலீஸார், தமிழக பக்தர்களை பல மணி நேரம் காக்க வைக்கின்றனர்.

இதனால் பலரும் சன்னிதானம் செல்லாமலே திரும்பி வருகின்றனர். இருப்பினும் பல போராட்டங்களுக்கிடையே சன்னிதானத்திற்கு செல்லும் பக்தர்களை கேரள போலீஸார் நேற்று கடுமையாக தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில், நேற்று தஞ்சாவூரை சேர்ந்த தயானந்த் என்ற பக்தர் உள்பட சிலர் 18ம்படி அருகே தரிசனத்துக்காக நின்று கொண்டு இருந்தபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கேரள போலீஸின் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸார் தயானந்தை தாக்கியுள்ளனர். இதனை அவருடன் வந்தவர்கள் தட்டிக் கேட்டதனால் அவர்களையும் போலீஸார் தாக்கியுள்ளனர்.
இதில் தயானந்தின் கழுத்து, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் சன்னிதானத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தயானந்த் சன்னிதானம் போலீஸில் புகார் அளித்துள்ளார். சபரிமலையில் தமிழக பக்தர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
kerala police attack tamilnadu devotees in sabarimalai