வெடிமருந்து பறிமுதல் பின்னணியில் இருந்த டாக்டர்கள் கைதுக்கும், பயங்கரவாதிகளின் சதியை முறியடித்த ஐபிஎஸ் அதிகாரி: யார் இந்த சந்தீப் சக்கரவர்த்தி.?
IPS officer Sandeep Chakravarthy praised for foiling terrorist plot
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து பயங்கரவாதிகள் போஸ்டர் ஒட்டுவது வழக்கமானதாக இருந்து வருகிறது. இந்நிலையில்,இந்த முறை இந்த விவகாரத்தை 2014-ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் சக்கரவர்த்தி சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொன்ற 'ஆப்பரேஷன் மகாதேவ்' நடவடிக்கைக்கு தலைமை ஏற்றவர். படையினருக்கு மிரட்டல் விடுக்கும் போஸ்டர் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும்படி இவர் உத்தரவிட்டார்.
இதன் போது போஸ்டரை ஒட்டிய 03 பேர் சிக்கிய நிலையில், அவர்கள் அளித்த பகீர் வாக்குமூலம் தான் பயங்கரவாத நெட்வொர்க்கின் பின்னணியை அம்பலப்படுத்தியுள்ளது. இவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணை காரணமாகவே டில்லி, ஹரியானா, உ.பி., வரை நீண்டு 2900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் பின்னணியில் இருந்த டாக்டர்களை கைது செய்ய வைத்துள்ளது.

காஷ்மீரில் சந்தீப் சக்கரவர்த்தி கேந்திர முக்கியம் வாய்ந்த இடங்களிலும், முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். அத்துடன்,உரி மற்றும் சோபோரில் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த இடங்களிலும் பணியாற்றியுள்ளார். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய பாரமுல்லாவில் நடவடிக்கை குழு எஸ்பி ஆகவும் பணியாற்றிய சந்தீப் சக்கரவர்த்தி, பாதுகாப்பு சவால்கள் நிறைந்த ஸ்ரீநகர் தெற்கு, ஹன்ட்வாரா, குப்வாரா, குல்காம், ஆனந்த்நாக் மாவட்ட எஸ்பி ஆகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன், இவர், கடந்த ஏப்ரல் 21 முதல் ஸ்ரீநகர் மூத்த எஸ்பி (SSP) ஆகவும் கடமையாற்றி வருகிறார்.
இவர், ஆனந்த்நாக், குப்வாரா, குல்காமில் பதவி வகித்த போது பல முக்கிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளித்ததுடன், பயங்கரவாத நடவடிக்கைகளையும் முறியடித்துள்ளார். போலீஸ் மற்றும் அப்பாவி மக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.

சந்தீப் சக்கரவர்த்திக்கு, ' ஆப்பரேஷன் ஸ்பெஷலிஸ்ட்' என்ற புனை பெயர் உண்டு. அதாவது, திட்டமிடுதல், உடனடியாக, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பது இவரது முக்கிய பாணியாக இருந்துள்ளது. இதற்கு முதன்மை உதாரணம் தான் இந்த போஸ்டர் விவகாரம் என போலீசார் கூறுகின்றனர். சிறிய அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட இந்த விவகாரம் விசாரணைக்கு பிறகு ஜெய்ஷ்-இ -கம்மது பயங்கரவாதிகள் சதி, வெடிமருந்து பறிமுதல் வரை சென்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் சக்கரவர்த்தி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராம கோபால் ராவ் ஆந்திர அரசு மருத்துவமனையில் பிராந்திய மருத்துவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ரங்கம்மாவும் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்காக வீரதீர செயல்களுக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கத்தை ஆறு முறை வென்றுள்ளார். ஜம்மு காஷ்மீரில் போலீசின் பதக்கம் நான்கு முறையும்
இந்திய ராணுவத்தின் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
English Summary
IPS officer Sandeep Chakravarthy praised for foiling terrorist plot