நற்செய்தி! முதலிடம் பிடித்த இரவிகுளம் தேசிய வன உயிரின சரணாலயம்...! சிறந்த பாதுகாப்பு நிறைந்த சரணாலயங்களில் ஒன்று...!
Good news top rated Iravikulam National Wildlife Sanctuary One best protected sanctuaries
இடுக்கியில் மூணாறு அருகே இரவிகுளம் தேசிய வனஉயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கும் நிலையில், இந்த சரணாலய பகுதியில் காட்டு யானை,மான், சிறுத்தை, வரையாடு, புலி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், பறவையினங்களும் உள்ளன.

இந்த இரவிகுளம் வனப்பகுதியை சுற்றுலா பயணிகள் பார்வையிட வேண்டும் என்றால் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.மேலும், இங்குள்ள புல்வெளிகள், சிறிதும், பெரிதுமான ஓடைகள், சலனமில்லாத காடுகள், இயற்கை எழில் கொஞ்சும் வகையில் விண்ணை முட்டும் மலைகள் என சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகவே இரவிகுளம் சரணாலயம் விளங்குகிறது.
இதன் காரணமாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இரவிகுளத்துக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை சார்பில் நாட்டில் சிறந்த முறையில் உள்ள பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவ்வகையில், 2020-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை நாடு முழுவதுமுள்ள 438 பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், சிறந்த சரணாலயங்களில் இரவிகுளம் தேசிய வனஉயிரின சரணாலயம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தவிர மூணாறு வனப்பகுதிக்கு உட்பட்ட மதிகெட்டான் சோலை, சின்னார் வனஉயிரின சரணாலயம் ஆகியவையும் முதல் 10 சரணாலயங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. மேலும், இரவிகுளம் தேசிய வனஉயிரின சரணாலயம், சிறந்த சரணாலயமாக தேர்வு செய்யப்பட்டதற்கு சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதன் நடுவே, கடந்த வாரம் தான் இரவிகுளம் சரணாலயத்தின் 50-வது நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வனத்துறை சார்பில் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 50 மாணவ-மாணவிகளை இரவிக்குளம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Good news top rated Iravikulam National Wildlife Sanctuary One best protected sanctuaries