ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் சட்டவிரோதமாக வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்து பாரிய விபத்து: 04 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்; 04 வீடுகள் தரைமட்டம்..!
Four killed in massive accident in Andhra Pradesh following the explosion of a gas cylinder and illegally possessed explosives
ஆந்திராவில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம், கம்மரவாரிப்பள்ளி (Kammaravaripalli) கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மதியம் 12:30 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் வெடிப்பு என கருதப்பட்ட நிலையில், அந்த வீட்டில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் வெடித்ததே விபத்தின் தீவிரம் அதிகரிக்க காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது விபத்து நடந்த வீடு உட்பட அருகிலிருந்த 04 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. விபத்தில் இடிபாடுகளில் சிக்கி விஸ்வநாத ரெட்டி, மகாபுன்னிசா, அஸ்லம் பாஷா உள்ளிட்ட 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 20 காயமடைந்துள்ளனர். இதில், 12 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிப்பு சம்பவத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Four killed in massive accident in Andhra Pradesh following the explosion of a gas cylinder and illegally possessed explosives