ஏவுகணை தாக்குதலால் விமான சேவை முடக்கம்…! - துபாயில் சிக்கித் தவித்த பி.வி.சிந்து பாதுகாப்பாக வீடு திரும்பினார்...!
Flight services suspended missile attack PV Sindhu who stranded Dubai returned home safely
அணுசக்தி பதற்றத்தை மையமாகக் கொண்டு ஈரான் மீது இஸ்ரேல்–அமெரிக்கா கூட்டணி தொடர்ந்து மூன்று நாட்களாக ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் சூழல் அதிகரித்து, பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.இந்த தாக்குதல்களின் நேரடி தாக்கம் பொதுமக்களின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

ஈரான் நடத்திய தாக்குதலால் துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையம் அருகே நடந்த டிரோன் தாக்குதலில் ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்த நபர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
மேலும், விமான நிலைய வளாகத்தை சுற்றி வெடிச்சத்தங்கள் கேட்டதால் பயணிகள் மத்தியில் கடும் அச்சம் நிலவியது.இந்த சூழ்நிலையால், இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து துபாயில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டார்.
சில நாட்கள் உறுதியற்ற சூழலில் காத்திருந்த அவர், தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார்.இதுகுறித்து அவர் ‘X’ தளத்தில் பதிவிட்டதாவது, “பத்திரமாக பெங்களூருவில் உள்ள என் வீட்டிற்கு திரும்பிவிட்டேன்.
கடந்த சில நாட்கள் மிகவும் பதற்றமாகவும் நிச்சயமற்றதாகவும் இருந்தது. எனினும் பாதுகாப்பாக வீடு திரும்பியதற்கு நன்றியுணர்ச்சி மிகுந்துள்ளது.
துபாய் அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், குடியேற்றத்துறை மற்றும் இந்த கடினமான நேரத்தில் உதவிய ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்போது ஓய்வெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட வேண்டிய நேரம்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Flight services suspended missile attack PV Sindhu who stranded Dubai returned home safely