குடகு அருகே பரிதாபம்.! காட்டு யானை தாக்கி விவசாய கூலித்தொழிலாளி உயிரிழப்பு.!
Farmer worker killed in elephant attack in kodagu Karnataka
கர்நாடக மாநிலத்தில் காட்டு யானை தாக்கி விவசாய கூலிதொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சாந்தபுரம் கிராம பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளிகள் குமார்(40) மற்றும் தொட்டய்யா ஆகிய இரண்டு பேரும் நேற்று முன்தினம் விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குமாரும், தொட்டையாவும் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால் காட்டு யானை பிடியில் சிக்கிக் கொண்ட குமாரை தும்பிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து காட்டு யானையை விரட்டி அடித்தனர். ஆனால் யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினரிடம், அப்பகுதியை சேர்ந்தவர்கள் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என்றும், உயிரிழந்த குமாரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் குமாரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதைத்தொடர்ந்து, மடிகேரி போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Farmer worker killed in elephant attack in kodagu Karnataka