மூச்சுத் திணறும் டெல்லி: AQI 440-ஐ கடந்ததால் 4-ம் நிலை அவசர கட்டுப்பாடுகள் அமல்...!
Delhi struggling breathe Level 4 emergency restrictions implemented AQI crosses 440
புதுடெல்லி நகரம் கடும் காற்று மாசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. கடந்த முன்தினம் 349 ஆக பதிவான காற்றுத் தரக் குறியீடு (AQI), நேற்று அதிரடியாக உயர்ந்து 440-ஐ கடந்து ‘அவசர நிலை’ அளவுக்கு சென்றது. இதனால், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த 3-ம் நிலை கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, 4-ம் நிலை கட்டுப்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி டெல்லி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.இந்த புதிய உத்தரவுகளின் கீழ், மண் அள்ளுதல், தரை தோண்டுதல், மண் மற்றும் கழிவுகளை குவித்தல், கட்டுமானப் பணிகள் மற்றும் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணிகள் அனைத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், செங்கல் சூளைகள், சூடான கலவை ஆலைகள், சுரங்கத் தொழில்கள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், அத்தியாவசிய தேவைகளைத் தவிர, நடுத்தர மற்றும் கனரக சரக்கு டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவசியமற்ற டீசல் ஜெனரேட்டர் பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், திறந்த வெளியில் எவ்வித பொருட்களையும் எரிக்கக் கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தனியார் வாகனப் பயன்பாட்டை குறைத்து, பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவசியமான சூழ்நிலையில் மட்டும் மின்சாரம், சி.என்.ஜி. மற்றும் பி.எஸ்.-6 தரநிலைக்கேற்ப உள்ள வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் அரசு–தனியார் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே படிப்பு மற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Delhi struggling breathe Level 4 emergency restrictions implemented AQI crosses 440