மதுபானக்கொள்கை ஊழல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரானார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.!
Delhi Chief Minister Arvind Kejriwal appeared for CBI investigation in liquor policy case
டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜரானார்.
டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதையடுத்து 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் மதுபான வியாபாரிகளுக்கு சலுகைகள் வழங்குதல், உரிமக்கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல், குறைத்தல், உரிமத்தை நீட்டித்தல் உள்ளிட்டவற்றில் ஊழல் மற்றும் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐயும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணினி, செல்போன், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிசோடியா, 3 அரசு அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் மதுபான கொள்கை அமல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மணிஷ் சிசோடியா தனது துணை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதன்படி, சிபிஐ முன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். மேலும் மதுபான கொள்கை தொடர்பாக எங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணை அமைப்புகள் பொய் கூறுகின்றன என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
English Summary
Delhi Chief Minister Arvind Kejriwal appeared for CBI investigation in liquor policy case