சைபர் மோசடி அபாயம்: இந்த மூன்று ’ஆப்கள்’ உங்க செல்போனில் இருந்தா உடனே டெலிட் பண்ணிடுங்க.. மத்திய அரசு கொடுத்த அலர்ட்
Cyber fraud risk If you have these three apps on your cell phone delete them immediately Central government issued an alert
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தி சைபர் கிரைம் கும்பல்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் கொஞ்சம் அசந்தாலே கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில், மத்திய அரசின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையமான I4C (14C) பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெக் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் சில ஸ்க்ரீன் ஷேரிங் செயலிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் இன்று அழைப்புகள் மட்டுமின்றி, ஆன்லைன் ஷாப்பிங், வங்கி பரிவர்த்தனை, மேப்ஸ் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான முக்கிய சாதனமாக மாறிவிட்டன. இதன் மூலம் வாழ்க்கை எளிதானாலும், அதையே பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் புதிய புதிய வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக, ஸ்க்ரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்தி, பயனர்களின் போனை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்து, OTP, வங்கி விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை திருடி நிதி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த பின்னணியில், AnyDesk, TeamViewer மற்றும் QuickSupport ஆகிய மூன்று ஸ்க்ரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அரசு தெளிவாக எச்சரித்துள்ளது. இந்த செயலிகள் தொழில்நுட்ப உதவிக்காக உருவாக்கப்பட்டவையாக இருந்தாலும், அவற்றை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
எனவே, அறிமுகமில்லாதவர்கள் கூறும் அறிவுறுத்தலின் பேரில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்வதையும், பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், சந்தேகமான அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் வந்தால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Cyber fraud risk If you have these three apps on your cell phone delete them immediately Central government issued an alert