கோவா இரவு விடுதி தீ விபத்தை தொடர்ந்து தப்பியோடிய உரிமையாளர்களின் மற்றுமொரு விடுதி இடிக்க உத்தரவு..!
Another hotel owned by the owners who fled after the Goa nightclub fire has been ordered to be demolished
கோவாவின் வடக்கு பகுதியில் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில் கடந்த 06-ஆம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டதில் 25 பேர் உரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து அன்று குறித்த இரவு விடுதியில் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது, முதல் தளத்தில் வேயப்பட்டிருந்த பனை ஓலை கூரைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற முயன்றனர். விடுதியின் குறுகிய வாசல் என்பதால், அனைவராலும் ஒரே சமயத்தில் வெளியேற முடியாத நிலையில், இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் சிலர் தரைதளத்தில் இருந்த சமையலறையில் புகுந்தனர். இதற்கிடையே, கூரையில் பற்றிய தீ, விடுதியின் பல பகுதிகளுக்கு மளமளவென பரவிய நிலையில், அப்பகுதியே புகைமண்டலமானது. இதில், பலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்து நடந்ததை அடுத்து விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகியோர் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய கோவா போலீசார் இன்டர்போல் உதவியை நாடியுள்ளனர்.
இந்நிலையில், இந்த இரண்டு உரிமையாளர்களுக்கு சொந்தமாக வாகாடோர் பகுதியில் ரோமியோ லேன் கடற்கரை பகுதியில் மற்றொரு இரவு விடுதி ஒன்று உள்ளது. தீ பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பிரச்சினைகளில் அந்த விடுதியை இடித்து அகற்றும்படி கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டு இருந்தார்.
முதல்வரின் உத்தரவையடுத்து புல்டோசர் மூலம் இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான மற்றொரு சொத்தையும் போலீசார் முடக்கியுள்ளனர். இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
English Summary
Another hotel owned by the owners who fled after the Goa nightclub fire has been ordered to be demolished