ஏ.ஐ.-ஆல் 20 லட்சம் பேரின் வேலை பறிபோகும் அபாயம்; நிடி ஆயோக் தகவல்; அதிர்ச்சியில் ஐடி உஊழியர்கள்..!
AI could put 2 million people out of work says NITI Aayog report
செயற்கை நுண்ணறிவு தாக்கத்தின் காரணமாக, இந்தியாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் தற்போது ஐ.டி., துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தாக்கத்தால், 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும் என்றும், பணிபுரிவோர் ஏ.ஐ., தொடர்பான படிப்புகளை கற்றுக்கொள்வதால், அடுத்த 05 ஆண்டுகளில், புதிதாக 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஏ.ஐ., குறித்த பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பவர்களே வேலையை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த 20 லட்சம் பேரின் வேலை இழப்பு சம்பந்தப்பட்டது மட்டுமின்றி; 2 - 3 கோடி பேரின் வருமானத்துடன் தொடர்புடையது என்றும் எச்சரித்துள்ளார். எனவே, தனிநபர்கள் ஏ.ஐ., தொடர்பான பயிற்சியில் இணைந்து, தங்கள் சூழலுக்கு ஏற்ப திறமையை தகவலமைத்து கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நம் நாட்டுக்கு அதன் மக்கள்தான் உண்மையான பலம். உலகில் அதிக எண்ணிக்கையிலான இளம் டிஜிட்டல் திறமையாளர்கள் இந்தியாவில் தான் உள்ளனர். ஏ.ஐ., காரணமாக வரப்போகும் மாற்றங்களை சாதகமான வாய்ப்புகளாக மாற்ற, தேசிய ஏ.ஐ., திறமை இயக்கம் என்ற பெயரில் நாடு தழுவிய கூட்டு முயற்சியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்தியாவை உலகிலேயே அதிக ஏ.ஐ., நிபுணர்களை கொண்ட நாடாக உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்றும் நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டி.சி.எஸ்., நிறுவனம், மொத்தமுள்ள 06 லட்சம் பணியாளர்களில், 02 சதவீதம் அடிப்படையில், 12,000 பேரை வரும் 2026, மார்ச் மாதத்துக்குள் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது. மேலும், பெரிய, நடுத்தர ஐ.டி., நிறுவனங்கள், சத்தமின்றி வேலையை விட்டு சென்று, வேறு வேலையை கண்டறியுமாறு பணியாளர்களை நிர்ப்பந்தித்து வருகின்றன. அதுப்போன்று கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 25,000 பேர் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை, இந்தாண்டு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என துறையை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
English Summary
AI could put 2 million people out of work says NITI Aayog report