ம.பி: ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பேர் பலி.! 5 பேர் மாயம்.!
3 Drown 5 Missing While Crossing river in madhya pradesh
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஆற்றை கடந்த போது நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் மாயமாகியுள்ளனர்.
மத்திய பிரதேசம் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் கொண்ட பக்தர்கள் கும்பல், ராஜஸ்தானில் ஒரு கோயில் திருவிழாவிற்குச் சென்றனர். அப்பொழுது மொரீனா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில், தண்ணீர் குறைவாக இருப்பதாக நினைத்துக் கொண்டு 17 பேரும் கால்நடையாக ஆற்றை கடந்து செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் பத்து பேர் பாதுகாப்பாக கரைக்கு நீந்தி வந்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேரின் உடல்களை மீட்பு குழுவினர் கைப்பற்றினர். ஆனால் அதில் ஒருவரின் முகம் சிதைந்து, அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்துள்ளது. மேலும் அந்த நபர் பக்தர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பேர் பக்தர்கள் குழுவைச் சேர்ந்த தேவ்கிநந்தன் (50) மற்றும் கல்லோ பாய் (45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மீட்பு குழுவினர், காணாமல் போன பக்தர்கள் குழுவில் இருந்த மேலும் 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
3 Drown 5 Missing While Crossing river in madhya pradesh