தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை; மறந்தும் இந்த நேரங்களில் சாப்பிடாதீங்க..!
Do not eat watermelon at these times
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இரவு பிரியாணி சாப்பிட்ட பின்னர் நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தர்பூசணியின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த செய்திக்கு பின்னர் பலரும் தர்பூசணி சாப்பிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனால், இதுவரை காலமும் சிலர் இரவில் தர்பூசணி பழத்தைச் சாப்பிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமல் உள்ளனர். அது குறித்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
குறிப்பாக, கோடைக்காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. ஆனால், அதை முறையாக சாப்பிட்டால் மட்டுமே அதன் நன்மைகளை பெற முடியும்.

அது தர்பூசணி மட்டுமல்ல எந்த பழமாக இருந்தாலும் பொருந்தும். தர்பூசணி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது, ஆனால், அதை உண்ணும் நேரம் குறித்து நிபுணர்கள் கூறுகையில், குறிப்பாக, இரவு 07 மணிக்கு மேல் எந்த வகையான பழத்தையும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
இந்த தர்பூசணியில் 94% நீர் உள்ளது, மேலும் அதில் லைக்கோபீன் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அது சற்றே அமிலத்தன்மை கொண்டது. இதனால், இரவில் நமது உடல் ஓய்வு நிலையில் இருக்கும்போது செரிமானம் மெதுவாக காரணமாகின்றது. இது குறித்து புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷில்பா அரோரா கூறுகையில், நமது செரிமான அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் நேரமான, மதியம் 12 மணி முதல் 1 மணி வரையிலான நேரத்தில் தர்பூசணி சாப்பிடுவது சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயுர்வேதத்தின்படி, இரவில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதல்ல என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. இது செரிமானப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்றும், வயிற்று உப்புசம், இரவில் செரிமானம் சீராக இருக்காது, சர்க்கரையும் நீரும் அதிகம் உள்ள தர்பூசணியை இந்த நேரத்தில் சாப்பிடுவது, வயிற்றில் கனமான உணர்வு மற்றும் இரைப்பை அழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் இரவில் உறங்கச் செல்வதற்கு முன் இதைச் சாப்பிடுவது அடிக்கடி சிறுநீர் கழிக்கக் காரணமாகி, ஆழ்ந்த உறக்கத்திற்கு இடையூறு விளைவிக்க கூடும்.
பொதுவாக இரவில் பழம் மெதுவாக செரிக்கப்படுவதால், அதிலுள்ள சர்க்கரை சரியாக உறிஞ்சப்படுவதில்லை. இதனால் மறுநாள் காலையில் வயிற்று உபாதை ஏற்படுகிறது. அதிக உணவு உண்ட பிறகு பழம் சாப்பிடுவது இன்னும் ஆபத்தானது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அதாவது, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) அல்லது இரைப்பைப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவில் தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக, நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட கூடாது என்று கூறப்படுகிறது. காரணம் இதில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் இரத்த குளுக்கோஸ் அளவைப் பாதிக்கக்கூடும்.
அதேப்போன்று, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் இதைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில், பழங்களில் உள்ள சர்க்கரை, இரவில் கொழுப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த உணவு முறையைப் பின்பற்றுவது நல்லது. பகல் நேரங்களில் சிற்றுண்டியாகவோ அல்லது உணவுக்கு முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவிற்குப் பிறகு பழங்கள் அல்லது இனிப்புகளைச் சாப்பிடும் பழக்கத்தைக் கைவிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
English Summary
Do not eat watermelon at these times