மனிதாபிமானம் எங்கே...? பள்ளி சிறுமியிடம் அத்துமீறிய ஓய்வுபெற்ற அரசு ஊழியர்...! - கம்பி எண்ண வைத்த காவலர்கள்...!
Where humanity retired government employee who violated school girl guards who send him prison
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், மாலை நேரங்களில் கோட்டூர்புரம் பகுதியில் இயங்கும் தனியார் பரதநாட்டிய பயிற்சி மையத்திற்கு சென்று நடனம் கற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பயிற்சிக்குச் சென்ற சிறுமியை, அந்த மையத்தின் பயிற்சியாளரின் கணவரான உமாசங்கர் (60) தனியாக அழைத்துச் சென்று ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தால் பதற்றமடைந்த சிறுமி, வீட்டிற்கு திரும்பியதும் நடந்ததை பெற்றோரிடம் பகிர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட நபர் மீது கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி, ஓய்வு பெற்ற அரசு ஊழியரான உமாசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தேனாம்பேட்டை பகுதியில் உள்ள கணக்கு தணிக்கை அலுவலகத்தில் உதவி மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் உமாசங்கர் என்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
பரதநாட்டிய பயிற்சிக்குச் சென்ற சிறுமியிடம் இவ்வாறு தொந்தரவு ஏற்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Where humanity retired government employee who violated school girl guards who send him prison