சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான் சினிமாவில் 'சிறுபான்மை' மக்கள்! விஜய் மக்களுக்காக உழைப்பது பிரமிப்பைத் தருகிறது! பார்த்திபன் பேச்சு!
Those who make small films are the minority in cinema Vijay work for the people is awe inspiring Parthiban speech
இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள புதிய திரைப்படமான ‘ஹபீபி’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நகரில் நேற்று நடைபெற்றது. ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களைத் தொடர்ந்து மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் மே 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த விழாவில் இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் சேரன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், ‘ஹபீபி’ திரைப்படத்தை பாராட்டியபடி,“காசு சம்பாதிப்பதை விட கலையை நேசித்து மீரா கதிரவன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நடிகர்கள் நடித்தது போலவே தெரியவில்லை. இயக்குநர் கஸ்தூரி ராஜா வீட்டில் எப்படி இயல்பாக இருப்பாரோ, அதேபோல இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்,” என்றார்.
தொடர்ந்து தமிழக முதல்வர் விஜயை பற்றியும் பார்த்திபன் பேசினார்.“தனிமனித நம்பிக்கையால் சாதித்துக் காட்டியுள்ள நம் ஊர்ப் பிள்ளை முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள். 200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு, இன்று ஒரு அரசு ஊழியரைப் போல காலை முதல் மாலை வரை மக்களுக்காக உழைப்பது பிரமிப்பைத் தருகிறது,” என்று பாராட்டினார்.
மேலும், சிறிய படங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை குறிப்பிட்ட அவர்,“சினிமாவில் ‘சிறுபான்மை மக்கள்’ என்றால் சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான். தியேட்டர்கள் கிடைக்காமல், படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் அவர்கள் கடுமையாக போராடுகிறார்கள். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இப்படிப்பட்ட நல்ல சின்ன படங்களுக்கு உதவ வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் சேரனும் ஹபீபி திரைப்படத்தை வெகுவாக பாராட்டினார்.“நேற்று படம் பார்த்தேன். இப்ப வரைக்கும் அந்தப் படத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. ஒரு முஸ்லிம் கிராமத்துக்குள் கூட்டிச் சென்று, என் பெயரையே சம்சுதீன் போல உணர வைத்திருக்கிறார்கள்,” என்றார்.
மேலும்,“இது ஒரு நாவல் மாதிரியான வாழ்வியல் படைப்பு. இப்படிப்பட்ட படங்களை எடுக்கத்தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னைக்கு வர வேண்டும். படம் பார்த்தால் தூக்கம் வராது. நேற்றிரவு முழுக்க நான் என்கிட்ட நானே பேசிக்கொண்டிருந்தேன்,” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
English Summary
Those who make small films are the minority in cinema Vijay work for the people is awe inspiring Parthiban speech