“இறந்தாலும் என் நாய் எங்களுடன்தான் இருக்க வேண்டும்” - புதைத்த நாயை நள்ளிரவில் தோண்டி எடுத்து வந்த ஷாருக்கான்!
Shah Rukh Khan digs up his buried dog in the middle of the night
பாலிவுட் நடிகர்களில் பலர் செல்லப்பிராணிகள் மீது அதிக பாசம் வைத்திருப்பவர்கள். குறிப்பாக நாய்களை குடும்ப உறுப்பினர்களைப் போலவே நேசித்து வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஷாருக்கானின் செல்ல நாய் மீது அவர் வைத்திருந்த பாசம் தொடர்பான ஒரு உருக்கமான சம்பவம் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த தகவலை ஷாருக்கானின் மனைவி கெளரி கானின் தாய்மாமா தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவின்படி, கெளரிக்கு அவர் ஒரு சீன இன நாயை பரிசாக கொடுத்திருந்தாராம். அந்த நாயை ஷாருக்கானும் மிகவும் நேசித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு முறை ஷாருக்கான் படப்பிடிப்பிற்காக வெளியே சென்றிருந்தபோது, அந்த நாய் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. வீட்டில் இருந்த ஊழியர்கள் நாயை ஒரு துணியில் சுற்றி அருகிலிருந்த கடற்கரையில் மணல் தோண்டி புதைத்துவிட்டு வந்துள்ளனர்.
அன்று நள்ளிரவு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய ஷாருக்கான், வழக்கம்போல் தனது செல்ல நாயை தேடியுள்ளார். அப்போது ஊழியர்கள், “நாய் இறந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளனர்.
அதைக் கேட்ட ஷாருக்கான், “இப்போது அது எங்கே?” என்று கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள், “கடற்கரையில் புதைத்துவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ஷாருக்கான், அதிகாலை 2.30 மணிக்கு உறங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி, “எங்கே புதைத்தீர்கள்? காட்டுங்கள்” என்று கூறி அவர்களை கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு நாய் புதைக்கப்பட்ட இடத்தை காட்டியதும், ஷாருக்கானே தன் கைகளால் மணலை தோண்டி நாயை வெளியே எடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த நாயை வீட்டிற்கு கொண்டு வந்து, வீட்டின் பின்புறத்தில் முறையாக அடக்கம் செய்துள்ளார். மேலும் அந்த இடத்தில் நினைவுச் சின்னம் போல ஒரு அடையாளத்தையும் வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது ஷாருக்கான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுததாகவும், ஊழியர்களிடம்,“என் நாயை எப்படி தூக்கி எறிய முடியும்? அவன் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் எங்களுடன்தான் இருக்க வேண்டும்,” என்று கூறியதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, கெளரி கானும் ஷாருக்கான் தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். மேலும், 11 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாய் இறந்தபோது ஷாருக்கானும் தனது துயரத்தை வெளிப்படுத்தி பதிவு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஷாருக்கான் தனது புதிய படமான ‘கிங்’ திரைப்படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்தார்.
English Summary
Shah Rukh Khan digs up his buried dog in the middle of the night