ஆச்சர்யமான நிகழ்ச்சி…..! திருமண மேடையில், பதாகையை ஏந்திக் கொண்டு கோரிக்கை விடுத்த மணமக்கள்…!
a different marriage function
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில், மணிவண்ணன் என்பவரது திருமணம் நடைபெற்றது.
இவர், மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் திருமணத்தில், மணமகளுக்கு தாலி கட்டியதும், தன் புது மனைவியிடம் பேசினார். உடனே, மணமக்கள் இருவரும், ஆளுக்கொரு பதாகைகளை ஏந்திக் கொண்டு, நின்றனர்.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு எல்லாம், இந்தக் காட்சி வியப்பாக இருந்தது. பின், மணமகன், மைக்கைப் பிடித்து, “முன்னால் பிரதமர் ராஜிவ் கொலையில், குற்றம் சாட்டப்பட்டு சிறையில் 28 ஆண்டுகளுக்கு மேலாக வாடும், 7 பேரையும் விடுவிக்க வேண்டும், என்று மணமக்களாகிய நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.
அந்த மணமக்கள் ஏந்தி இருந்த பதாகைகளில், வேலுார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அந்த 7 கைதிகளின் படங்கள் அடங்கிய பதாகையை, மணமகள் பிடித்திருந்தார்.
மணமகன் ஏந்தி இருந்த பதாகையில், “ 7 பேரையும் விடுதலை செய். சட்டமன்றத் தீர்மானத்திற்கு உயிர் கொடு” என்று எழுதப் பட்டிருந்தது.
இதைக் கண்டு, திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், ஆச்சர்யம் அடைந்தனர்.
இந்த திருமணத்தில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் அடைக்கப் பட்டுள்ள, 7 பேரை விடுதலை செய்யும்படி, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தமிழகம் முழுவதும் சென்று, மக்கள் சந்திப்பு இயக்கததை நடத்தி வருகிறார்.
இந்த திருமண விழாவில், மணமக்களும் இந்தக் கோரிக்கையுடன், தங்கள் வாழ்க்கையைத் துவக்குகிறார்கள். அவர்கள் வாழ்வில் சுதந்திரமாக இணைந்தது போல், சிறையில் உள்ள 7 பேரும், விடுதலை பெற்று, சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்.
இதற்காக, ஜெயலலிதா சட்டமன்றத்தில், நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, தற்போதுள்ள அரசு உயிர் கொடுக்க வேண்டும், என்று கூறினர்.
English Summary
a different marriage function