சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்.!! ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு.!!
AndhraHC gave Interim bail for Chandrababu Naidu
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் உடல் நலக்குறைவு மற்றும் கண்பார்வை கோளாறு காரணமாக சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ காரணங்களுக்காக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
AndhraHC gave Interim bail for Chandrababu Naidu