வெள்ளக்காடான அசாம்- நீரில் மூழ்கிய 108 கிராமங்கள்! தவிக்கும் மக்கள்!
Flooded Assam 108 villages submerged in water Suffering people
அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், கடந்த 1 வார காலமாக 20 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
அசாமில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளால் அதிகமாக நல்பாரி மாவட்டத்தில் 108 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாமில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பக்லாடியா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நல்பாரி மாவட்டம் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 310 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 44,707 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
இந்த வெள்ளத்தால் 2 அணைக்கரைகள், 15 சாலைகள், 2 பாலங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 1.07 லட்சம் கால்நடை வளர்ப்பு பிராணிகள் மற்றும் கோழி பண்ணைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசாமில் மொத்தம் உள்ள 31 மாவட்டங்கள் இதுவரை 20 மாவட்டங்கள் வெள்ளத்தால் தீவிர பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நல்பாரி, பக்சா, லக்கிம்பூர், தமுல்பூர், பர்பேட்டா ஆகிய மாவட்டங்கள் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மாநில பேரிடர் ஆணையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் எனவும் அதன் பின்னர் தான் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Flooded Assam 108 villages submerged in water Suffering people