சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! பரபரப்பில் ஆந்திர பிரதேசம்!
Chandrababu Naidu court custody extended
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அம்மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கோரி இரண்டு முறை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று தொடங்கிய ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை அருகே சென்று பேப்பர் மற்றும் குடிநீர் பாட்டில்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தின் போது தெலுங்கு தேச கட்சியின் இந்துபுரம் தொகுதி எம்எல்ஏவும் பிரபல நடிகரமான பாலகிருஷ்ணா எழுந்து நின்று தொடையை தட்டி, மீசையை முறுக்கி ஆவேசமாக பேசி சம்பவம் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த வழக்கு விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
English Summary
Chandrababu Naidu court custody extended