அசாமில் கொட்டி தீர்த்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு - 21,000 பேர் பாதிப்பு
21000 people affected by flood in Assam
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லக்கிம்பூர், பிஸ்வநாத், தர்ராங், தேமாஜி, திமா ஹசாவ், திப்ருகார் மற்றும் கோலாகாட் உட்பட 19 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் வெள்ளத்தினால் சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டிட உள் கட்டமைப்புகள் கடும் சேதமடைந்துள்ளன. 13.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் மாநில பாதுகாப்பு படையினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை தொடர்ந்து மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தேமாஜி மற்றும் லக்கிம்பூர் பகுதிகளில் வெள்ளத்தினால் அதிகபட்சமாக 20,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து லக்கிம்பூர் பகுதியிலுள்ள சுபன்சிரி அணையில் மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சுபன்சிரி அணையின் மின் உற்பத்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
21000 people affected by flood in Assam