ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷ்யா - அமெரிக்கா தகவல்
US says Russia built drone factory with help of Iran
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு உதவியாக மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்கள் அளித்து உதவி வருகின்றன. மேலும் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கி உதவி வருகின்றன.
இதனிடையே போரில் உயிரிழப்புகளை தடுப்பதற்கும் எதிரிகளை துல்லியமாக தாக்கி அளிப்பதற்கும் இரண்டு நாடுகளும் ட்ரோன்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறது. இதனால் ட்ரோன்களின் பங்கு போரில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஈரான் உதவியுடன் ரஷ்யா ட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைத்து வருவதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ட்ரோன் தயாரிப்பிற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சியை ஈரான் அளித்து வருவதாக அமெரிக்கா உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், ரஷ்யாவின் அலபுகா பொருளாதார மையத்தில் கட்டப்படும் ட்ரோன் தொழிற்சாலை அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாக ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்கப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
US says Russia built drone factory with help of Iran